Friday, October 5, 2012

அடையாளம் - 1

மிக
அகலமான சாலை
புழுதி பறக்காமல்
எண்ணற்ற
அதி வேகமான
வாகனங்கள் - வித விதமாய்

வாட்டமாய் நடைப்பாதை
ஆங்காங்கே
இன்று உதிர்ந்த
காய்ந்த சருகுகள்

நாட்கணக்கில்
மழை அடித்தும்
சகதி  படியாத
பாதை

மழையில் நனைந்து
இன்னும் சிறிது தூரம்
நடக்கலாம்

எங்காவது
மண்வாசனையை மட்டும்
மோப்பம் பிடித்து
ஒரு
குடுவையில்
அடைத்துக் கொள்ளவேண்டும்.

விலகல் - 1

ஒரு நீண்ட
குளிர் இரவின்
மௌனத்தைக் விரட்டும்
மெல்லிய விசும்பல்
எங்கும் படர்கிறது

எதன் மீதும்
நம்பிக்கையற்ற - அந்த
விசும்பல்
செவிகளில் கனக்கிறது

தினம்
உடைகிறேன் - அதன்
துயரத்தின் அடர்த்தியை
தாளமுடியாமல்

வேறு யாரை விடவும்
மூத்திர வாடையின்
வீரியத்தை
மிக அதிகமாய்
உணர்ந்துக்கொண்டதை புலம்பினான்,
உணர்ந்ததை விட
உணர்ந்துக்கொண்டே இருப்பதை..

சூடான
தேனீர்
அருந்திக்கொண்டும்

அடுத்த அறையில்
உபசரிப்பை
கேட்டுக்கொண்டும்

விருப்பமில்லாத
நிகழச்சிகளை
பார்த்துக்கொண்டும்

அவ்வப்போது
இடத்தை நகர்த்திக்கொள்ளும்
பல்லியை
கடிந்துக்கொண்டும்

பார்வையால் கடிகார
முட்களை
முடுக்கிகொண்டும்

எப்பொழுதாவது
சாத்தியப்படும்  - ஆழ்ந்த
நித்திரையில் கூட
அதை
உணர்ந்துக்கொண்டே இருப்பதை
புலம்பினான்

அவனுக்கு தெரியும்
மௌனத்தைக் விரட்டும்
அந்த விசும்பலும் - மெல்ல
தோற்றுக்கொண்டிருப்பது பற்றி

ஒரு நீண்ட
குளிர் இரவில்
மௌனத்தைக் விரட்டும்
அந்த விசும்பல்
எழுப்பப்படவில்லை

நம்பிக்கையற்று
விலகிக் கொண்டுவிட்டான்
மனித வாடையில் தொடங்கி
அனைத்திலிருந்தும்  ..


காற்றை நிரப்பும் வார்த்தைகள்

வெறும்
காற்றை நிரப்பும்
இந்த
வார்த்தைகள்..
வெளுப்பதைப் விட
கரைந்துவிடக் கூடாதா

என்ன சொல்லி
ஏற்றுக்கொள்வது
அந்த
சாயப் பூச்சற்ற
வார்த்தைகளை?

இப்பொழுதெல்லாம்
உதிர்ந்த உடனே
வெளுத்துவிடுகிறது..

இதுவும்
அலுப்பாய்த்தான் இருக்கிறது.



Thursday, October 4, 2012

விவாக-ரத்து


ஒரு
சம்பிரதாயமான
திருமணப்  பதிவில்..


எப்போதோ  தெரியப்படுத்திய
அல்லது
தெரியபடுத்தாமல் கைவிடப்பட்ட
ஒரு காதல் ரத்தாவதைப்  போல்..

வீட்டு அலமாரியை விட்டு
புடவையைத் தவிர
மற்ற ஆடைகளின் பயணம்
ரத்தாவதைப்  போல்

தெளிவில்லாதப்  பதட்டத்தைத்  தவிர
அதட்டலும்
கண்டிப்பும்
கோபமும்
அப்பாவிடம் ரத்தாவதைப்  போல்

புரிந்துக்கொண்டோ,
புரிந்துக்கொள்ளாமலோ
வரிந்துக்கொண்ட சில நட்பும்
ரத்தாகிறது - யார் கையொப்பமும்
இல்லாமல்

ஒரு
சம்பிரதாயமான
திருமணப்  பதிவில்.



Monday, October 1, 2012

ராஜீவ் காந்தி


"ஏய் இன்னைக்கு ராஜீவ் காந்தி நம்ம ஊருக்கு வர்றார்டி.." முகத்தில் அப்பி இருந்த ஃப்பேர் அண்ட் லவ்லியை தேய்த்துக் கொண்டு அம்மா சித்தியிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். சித்தி, இந்திரா காந்தியை நேரில் பார்த்திருப்பதாகவும் அவரை விட ராஜீவ் காந்தி கலர் அதிகம் இருக்க கூடும் என்றும் உறுதியான குரலில் தன் அனுமானத்தை கூறினாள் . கருத்தாய் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த நான் இந்த  பேச்சை கேட்டு திடுக்கிட்டு சற்று கோபமாய் வெளியேறினேன். எனக்கு ராஜீவ் காந்தியின் மேல் சிறிது கோபம். என்றோ ஒரு நாள் நண்பன் ஒருவன் ஏரோப்ளேன் ஒன்று கைக்கு எட்டும் தூரத்தில் பறந்ததாகவும், அதிலிருந்து ராஜீவ் காந்தி டாட்டா காட்டி சாக்லேட் வீசியதாகவும் சொல்லி எல்லோரையும் உசுப்பிவிட்டிருந்தான். இந்த விஷயம் எப்படியோ என் தெரு வரை பரவி, அன்றில் இருந்து எப்போது ஏரோப்ளேன் பறந்தாலும் மூச்சு முட்டும் வரை அதை விரட்டி தோற்பதே எங்கள் கடமை, லட்சியம் எல்லாம். ஒரு முறை கூட ராஜீவ் காந்தி சாக்லேட் வீசியதில்லை, அட சாக்லேட் கிடக்கிறது ஒரு டாட்டா கூடக் காட்டாமல் போனால் கோபம் வருமா வராதா?. ஏரோப்ளேனில் ஜன்னலை திறந்து டாட்டா காட்டுவதில் இருக்கும் அசௌகரியம் அப்போது விளங்கவில்லை. இருந்த கோபத்தில் மம்மிக்கு டாட்டா சொல்லாமல் பள்ளிக்கு கிளம்பினேன்.



 பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரே பரபரப்பு, எங்கு பார்த்தாலும் ராஜீவ் காந்தியை பற்றிய பேச்சு, கிளாசுக்குள் நுழைந்த பிறகுதான் விஷயம் தெரிந்தது எங்கள் எல்லோரையும் ராஜீவ் காந்தியை பார்க்க அழைத்து போகிறார்கள் என்று. அதனால் பையை கிளாசிலே வைத்து விட்டு வெளியே வரும்படி மிஸ் சொல்லிச் சென்றார். பையை வைத்துவிட்டு திரும்பும் போதுதான் அவர்களின் தீவிரமான பேச்சு என் காதில் விழுந்தது. மணி, கார்த்தி, ஜக்கு.
ஜக்கு கொஞ்சம் பயத்துடன்அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். மணி தன்னுடைய முழு ப்ளானையும் மற்ற இருவருக்கும் விளக்கிக் கொண்டிருந்தான். முவரும் தங்களுடைய பென்சிலை முடிந்த வரை  கூர்மையாய் சீவி வைத்து கொள்ள வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும்  குறி தப்பவே கூடாது. என்ன விஷயம் என்று நெருங்கி விசாரித்ததில் மணி கொஞ்சம் விலாவரியாக விளக்கினான். அதாவது ராஜீவ் காந்தியை பார்க்க போகும் போது நாம் வெட்ட வெளியில் உட்கார வேண்டும் என்றும், அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கழுகு நம்மை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். அதற்குதான் முவரும் பென்சிலை கூராய் தீட்டி எதிர் தாக்குதலுக்கு தயாராய் இருபதாய் சொல்லி அவர்களை அழைத்துச் சென்று விட்டான். சற்று குழப்பமாய் இருந்தது,  எனக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை, பென்சில் வைத்துக் கொண்டு எப்படி?? ஒரு ரெனால்ட்ஸ் பேனா இருந்தால் சமாளிக்கலாம் என்பது என் திட்டவட்டமான கருத்து.

அனைவரையும் வரிசையாக அழைத்துச் சென்று பள்ளியில் இருந்து சற்று தொலைவில் இருந்த காந்தி சிலை அருகே உட்கார வைத்தனர்.  சிறிது  நேரத்தில் ராஜீவ் காந்தி வந்து விட்டார்.. கையசைத்தார்.. கொடி ஏற்றினார்.. சிரித்தார்.. எதை பற்றியோ பேசினார் ..  சாக்லேட் கூட கொடுத்தார். உக்கும்., யாருக்கு வேணும்.. மணி சொன்ன மாதிரி இன்னும் அந்த கழுகு வந்து சேரவில்லை. எல்லோரும் ரா.காந்தி பேசுவதை பார்த்து கொண்டிருக்க நான்கு தலைகள் மட்டும் வான் நோக்கி இருந்தது. நான் அந்த மூவரிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்தேன். முவரும் கையில் பென்சிலை உறுதியாய் பிடித்துக் கொண்டு தயாராய் இருந்தனர். எந்த நேரத்திலும் அந்த சாகசம் நிகழலாம், அப்போது ஜக்குவின் பென்சில் கூர் எங்கோ மோதி உடைந்து விட,  அவன் பதட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டான். ஒருவழியாய் கார்த்தி அந்த பென்சிலை சீவி பழையபடி கூர்மையாக்கி கொடுத்தபின் சமாதானமாகி பொசிஷனுக்கு வந்து விட்டான். இதுவரை நான் கழுகை கிட்டிருந்து பார்த்ததில்லை இன்று எப்படியேனும் பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில்  கீழும் மேலும்  மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு காக்கை கூட வானில் வந்தபாடு இல்லை, அதற்குள் ஜன கன மன பாட்டு, பின் எல்லோரும் எழுந்து திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்கள் . ரா.காந்தி கூட கிளம்பி விட்டார் ...!, ச்சே கழுகு வர்ற வரைக்கும் அவர் இருந்திருக்கலாம்..  இன்னைக்கும் ராஜீவ் காந்தி(!) ஏமாத்தி புட்டாரே..  ப்ச் .. நான் கொஞ்சம் வருத்ததுடன் திரும்பினேன்,  ஜக்கு மட்டும் கொஞ்சம் உற்சாகமாய்...


கொஞ்ச நாட்கள் ராஜீவ் காந்தியை சுத்தமாய் மறந்திருந்தேன். "ஏன்டி ராஜீவ் காந்தி செத்துட்டாரமே ?" முகத்தில் அப்பி இருந்த ஃப்பேர் அண்ட் லவ்லியை தேய்த்துக் கொண்டே மம்மி சித்தியிடம் கேட்டாள்.
 ராஜீவ் காந்தி செத்துட்டாரா.??. சரி கிடக்கட்டும் என்று காதில் வாங்கிக் கொண்டு கடை தெரு பக்கம் நடந்தேன் . கடை தெரு வெறிச்சோடி இருந்தது,  ஆட்டோ நிறுத்தத்தில் ராஜீவ் காந்தியின் பெரிய படம் ஒன்றை மாட்டி பத்தி ஏற்றி வைத்திருந்தார்கள்.  எப்போதும் பால் வாங்கும்  கடை பக்கம் ஒதுங்கினேன். பெருசுகள் ராஜீவ் காந்தியின் மரணத்தை தினத் தந்தி வைத்து துப்புதுலக்கி கொண்டிருந்தார்கள்.

ஒரு பொண்ணு.... வயுத்துல பாம்..... குனிஞ்சது .. வெடிச்சது.. என்று அரை குறையாய் காதில் விழுந்ததே கொஞ்சம் பீதியை கிளப்பியது. பால் வாங்கிக் கொண்டு திரும்பும் போது ஒரு பெருசு "ராஜீவ் காந்தி கூட செத்தது பத்து போலிசும் நாலு பொது ஜனங்களும் தான்.. நம்ம ஊரு கட்சி காரனுங்க ஒருத்தன் கூட அங்க இல்ல.. அது எப்பட்ரா ??" என்று பொருமிக் கொண்டிருந்தார். இந்த கேள்வி மட்டும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதில் யாரும் சொன்னதாக தெரியவில்லை. எது எப்படியோ.., என்னை இரண்டு முறை ஏமாற்றிய  ரா.காந்தி இறந்தே போய்விட்டார் :(

Tuesday, June 15, 2010

ஓடி விளையாடு பாப்பா




".. காலை எழுந்தவுடன் படிப்பு,
பின்பு கனிவுக் கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு .. "

என்று பாரதி பாடியதை நம்ம பாப்பாக்கள் பின்பற்றுகிறார்களோ என்னவோ தெரியாது ஆனால் ஜப்பான் பாப்பாக்கள் பாரதியை படிக்காமலே கச்சிதமாய் பின்பற்றுகிறார்கள், காரணம் பள்ளி. ஜப்பானில் நான் தங்கி இருக்கும் இடத்தில இருந்து அலுவலகத்திற்கு போகும் வழியில் மூன்று பள்ளிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் அங்கு விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதே எனக்கு பொழுது போக்காகிவிட்டது . நாம் விளையாடுவது போல் ஒரே கிரவுண்டில் பத்து பிட்ச் வைத்து அடித்துக் கொள்ளும் பாரம்பரியம் இவர்களுக்குக் கிடையாது, வாய்ப்பும் கிட்டாது. விடுமுறை நாட்களிலும் பயிற்சியாளர்கள் புடைசூழ கிரவுண்டுக்கு ஆஜராகி பேஜாராய் விளையாடுகிறார்கள். விளையாட்டுக்கேத்த சீருடை, தொப்பி, ஷு சகிதமாகத்தான் விளையாடவே வருகிறார்கள். ஒவ்வொரு மாணவி/மாணவனுக்கும் அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு பின் அவனுக்கு பிடித்த விளையாட்டினிலோ அல்லது திறமையின் அடிப்படையிலோ குறிப்பிட்ட விளையாட்டில் கூடுதல் கவனம் தரப்படுகிறது. பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் விளையாட்டு உபகரணங்களை நம் மாநில விளையாட்டு வீரர்கள் கூட வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கிட்ட தட்ட ஒரு ப்ரொபஷனல் விளையாட்டு வீரரை போலதான் ஒவ்வொரு மாணவனும்/மாணவியரும் நடத்தப் படுகிறார்கள். (உடனே நம்ம ஊர குறை சொல்ல ஆரம்பிச்சிடுவிங்களேன்னு கோபப்படாதிங்க, வேற வழி இல்ல புலம்பித்தான் ஆகணும்:( இவ்வளவும் நான் சொல்லக் காரணம் இதில் பத்து சதவிதம் கூட நம் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதால்தான் . அதுவும் அரசுப் பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது பி.டி பீரியட் என்றாலே சலிப்பாய்தான் இருக்கும். ஒட்டு மொத்த வகுப்பிற்கும் ஒரே கால்பந்துதான் கொடுப்பார்கள். கிளாஸ் லீடர் என்ற முறையில் பந்தை ஆசிரியரிடம் இருந்து வாங்கி கீழே வைத்து பலம் கொண்ட மட்டும் ஓங்கி உதைப்பேன் அத்தோடு என் பி.டி பீரியட் முடிந்தது. என்பது பேரும் ஒரு பந்தின் பின் ஓடினால் வேறு என்ன செய்ய முடியும், பந்தை கண்ணால் பார்ப்பதே பெரிய விஷயம். நம் பள்ளிகள் வெறும் கல்வி தொழிற்சாலைகளாக மட்டுமே தொடர்ந்து இயங்கி வருவது போல் பாவ்லா காட்டுகிறது அதையும் உருப்படியாய் செய்வதில்லை. சரி விடுங்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு இதுக்காகவே ஒரு பெருசு சொல்லி வச்சிட்டு போய் இருக்கு, இதையே நானும் சொல்லிட்டு தாண்டி போறேன், வேற என்னத்த செய்ய?



என்னதான் ஜப்பானை வியந்தாலும், இங்கு அனைத்தும் இயந்தரமாகி விட்டது போன்ற உணர்வு தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சிறுவர்கள் கூட எப்பொழுதும் உற்சாகமின்றியே காணப்படுகின்றனர். சமிபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன், நண்பர் குடும்பத்துடன் ஜப்பானில் நீண்ட நாட்களாக வசிப்பவர். அவரின் மகள் இங்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவர் மகளின் பள்ளியை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் கூறிய விஷயம் திடுக்கிடச் செய்தது, ஜப்பானில் குழந்தைகளுக்கு ஆக்ரோஷ உணர்ச்சி (aggresiveness) குறைவாய் இருக்க மருந்து புகட்டப் படுகிறது என்பதுதான் அது. சுருக்கமாக சொல்லணும் என்றால் சுரணை இல்லாமல் இருக்க பழக்கப் படுத்தவது போல். இது அவர்களின் ஆரம்ப கால பழக்கமா இல்லை உலகப் போருக்குப் பின் எடுக்கப்பட்ட பல சத்திய பிரமாணங்களில் இதுவும் ஒட்டிக் கொண்டதா என்று தெரியவில்லை. எதுவா இருந்தா என்ன நல்ல விஷயம்தானே என்று எண்ண முடியவில்லை, காரணம் சாதாரனமாய் குழந்தைகளிடம் காணும் ஒரு துறு துறுப்பு சுத்தமாய் மிஸ்ஸிங். என் மாமா அவரின் மகளை அடிக்க போகும் பொழுதெல்லாம் அவள் வீட்டின் வெளியில் பொய் நின்றுக் கொண்டு "எங்க ஓடிவந்து என்னய அடி பாக்கலாம்.." என்று இடுப்பை ஆட்டிக் காண்பித்து தெருவில் குதித்து ஓடி விடுவாள். குழந்தைகளுக்கு இந்த சுரணை கூட இல்லாமல் இருந்தால் எப்படி??

Friday, May 21, 2010

Puppy Shame



அது வழக்கமான திங்கட்கிழமை, காலை ப்ரேயர் முடிந்து அனைவரும் வரிசையாக கிளாஸ்க்கு சென்று அமந்திருந்தோம். எப்போதுமே முதல் பீரியட் தொடங்கும் முன்னர் ஒரு லேசான கிலி ஏற்படுவது சகஜம் முன்தினம் சொன்ன ஹோம் வொர்க் இத்யாதி இத்யாதி விஷயங்கள் எல்லாம் அப்போதுதான் ஞாபகத்துக்கு வரும். அதுவும் திங்கட்கிழமை காலை என்றால் கேட்கவே வேண்டாம், இந்த பக்கமாதான் ஸ்கூல்க்கு போகணுமான்னு கேட்காத குறையாக வந்து உட்கார்ந்து இருப்பேன். எல்லாம் சரியாய் முடித்திருந்தாலும் அந்த கிலி அடங்க குறைந்தது இரண்டு பீரியட் ஆகும். முதல் பீரியட் இங்கிலீஷ், ரோஸ்லின்ட் மிஸ் உள்ளே வர "குட் மார்னிங் மிஸ்ஸ்..." கோரஸ் , அதே கோரஸ் பக்கத்து பக்கத்து கிளாசிலும் வந்து அடங்கியது. அதற்க்கு பிறகு நிலவும் அமைதி இருக்கிறதே.. அது வயித்துக்கும் வாயிக்கும் உருண்டு கொண்டிருக்கும் கிலியை ஆ காட்டச் சொல்லி வேடிக்கை பார்க்கும். "டேக் யுவர் புக்.. டர்ன் டு பேஜ் தர்ட்டி.." ன்னு மிஸ் சொன்ன பிறகுதான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பக்கத்து பெஞ்சில் இருக்கும் பானுவையே பார்ப்பேன். கிளாஸ் ஆரம்பித்து இருபது நிமிடம் ஆகியிருக்கும், பிரின்சிபால் மேடம் பரபரப்பாக உள்ளே நுழைந்தார். "குட் மார்னிங் மேடம்ம்ம்.." பதிலுக்கு குட் மார்னிங் வரவில்லை.. சிட் டௌனும் வரவில்லை. இவங்க ரொம்ப நல்ல மேடம் ஆச்சே எப்போ கிளாசுக்கு வந்தாலும் மிஸ்கிட்ட பேசிட்டு போய்டுவாங்க, ஆனா இன்னைக்கு என்ன திரும்பி கிளாச ஒரு டைப்பா பார்க்குறாங்க. எதுக்கும் ஒரு முறை டை, பேட்ஜ் எல்லாம் சரி பார்த்துக் கொண்டேன். என்ன சொல்ல போகிறார் என்று எங்களுடன் மிஸ்ஸும் உன்னிப்பாய் கவனிக்க, " வாட் இஸ் கேபேஜ் இன் டமில்?" என்று கேட்டு விட்டு எங்களை முறைத்து பார்த்தார். ப்பூ இதுதானா விஷயம்.. வேற என்னமோ ஏதோன்னு.. மனசுக்குள்ள ஓடிக் கொண்டிருக்கும்போதே "முட்டை கோசு" என்ற பதில் சத்தமாக என் அனுமதி இல்லாமல் என் வாயில் இருந்தே வந்து தொலைத்தது. நான் யோசிக்க கூட இல்லையே, அதற்க்குள் பதில் எங்கிருந்து வந்தது? பதில் சொன்னதுதான் தாமதம், எங்கிருந்தோ தாவி என் கையை லபக்கென்று பிடித்து தர தரவென்று இழுத்துக்கொண்டு மேடம் ஓட என்ன நடந்தது ஏது நடந்தது என்று புரியாமல் கூடவே நானும் ஓடினேன். இது என்னடா வம்பு, எதாவது தப்பா சொல்லிட்டோமோ? இல்லையே முட்டை கோசு கரெக்ட் ஆச்சே.. ஒரு வேளை கோசு மட்டும் தான் சொல்லனுமா? ஒய் யு செட் முட்டை கோசு?னு கேட்டாங்கனா என்ன பதில் சொல்றது?, ச்சே கம்முனு இருந்திருக்கலாம்.. ப்ச் கொட்டி நிமிர்ந்து பார்க்கும் போது பிப்த் ஸ்டாண்டர்ட் ரூம் முன்னாடி நின்று கொண்டிருந்தேன். அட! ஒருவேளை டபுள் ப்ரோமொஷனா!?! போன வாரம் கூட இப்ராகிம் டபுள் ப்ரோமோஷன் வாங்கி நம்ம கிளாசுக்கு வந்தானே.. இதே மாதிரி முட்டை கொசுன்னு சொல்லி இருப்பானா?.. இருந்தாலும் முட்டை கோசுக்கு போய்... என்ற யோசனையில் இருந்து எளிதாக வெளியே வரவைக்கும் உறுமலுடன் "ம்ம் டெல் தெம்.." என்றார் மேடம். டபுள் ப்ரோமோஷன் வாங்குவதை பாதியிலே விட்டுவிட்டு மேடமை புரியாமல் பார்த்தேன், அதே பாவனையில் கிளாசின் உள்ளேயும் எட்டிப் பார்த்தேன். ஒட்டு மொத்த பசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த பாம்பு டான்ஸ் ஆடும் பொண்ணும் (அவ்ளோ அழகு !) திரும்பி பார்த்துக்கொண்டிருப்பது ஏனோ என்னை மிகவும் நெளியச் செய்தது.. டெல் தெம்னா இவங்ககிட்ட எதோ சொல்லனும்.. என்னத்த சொல்லனும்?? ஓ அதுவா.., அதற்குள் "ம்ம் கமான்" மறுபடியும் மேடம் லேசாக உறும அவசர அவசரமாக கோசு மட்டும் வாயில் இருந்து அபத்தமாய் உருண்டு விழுந்தது முட்டையை காணவில்லை. எந்த கேள்வியும் கேட்க்க படாமல் "ம்ம் டெல் தெம் ..கமான்.." என்ற உறுமலுக்கு வெறுமனே "கோசு " என்ற பதில் நாராசமாய் இருந்தது.. நாராசமாய்தான் இருக்கும். அந்த கிளாசில் இருந்த ஜெயா மிஸ் வேறு கோல் என்று சிரித்து விட்டார். ச்சே.. வேற ஒரு கிளாஸ்ல பப்பி ஷேம் ஆய்டுச்சே.. இனி யாராவது கேள்வி கேட்கட்டும்.. மேடம் கைபிடியை லேசாக தளர்த்திய மறுவிநாடி என் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அன்றில் இருந்து இரண்டு விஷயங்கள் என்னில் ஒட்டிக்கொண்டது ஒன்று முட்டை கோசு மேல் கூடுதல் பற்று(!) இரண்டாவது உங்களுக்கே புரிந்திருக்கும்.