Tuesday, June 15, 2010

ஓடி விளையாடு பாப்பா




".. காலை எழுந்தவுடன் படிப்பு,
பின்பு கனிவுக் கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு .. "

என்று பாரதி பாடியதை நம்ம பாப்பாக்கள் பின்பற்றுகிறார்களோ என்னவோ தெரியாது ஆனால் ஜப்பான் பாப்பாக்கள் பாரதியை படிக்காமலே கச்சிதமாய் பின்பற்றுகிறார்கள், காரணம் பள்ளி. ஜப்பானில் நான் தங்கி இருக்கும் இடத்தில இருந்து அலுவலகத்திற்கு போகும் வழியில் மூன்று பள்ளிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் அங்கு விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதே எனக்கு பொழுது போக்காகிவிட்டது . நாம் விளையாடுவது போல் ஒரே கிரவுண்டில் பத்து பிட்ச் வைத்து அடித்துக் கொள்ளும் பாரம்பரியம் இவர்களுக்குக் கிடையாது, வாய்ப்பும் கிட்டாது. விடுமுறை நாட்களிலும் பயிற்சியாளர்கள் புடைசூழ கிரவுண்டுக்கு ஆஜராகி பேஜாராய் விளையாடுகிறார்கள். விளையாட்டுக்கேத்த சீருடை, தொப்பி, ஷு சகிதமாகத்தான் விளையாடவே வருகிறார்கள். ஒவ்வொரு மாணவி/மாணவனுக்கும் அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு பின் அவனுக்கு பிடித்த விளையாட்டினிலோ அல்லது திறமையின் அடிப்படையிலோ குறிப்பிட்ட விளையாட்டில் கூடுதல் கவனம் தரப்படுகிறது. பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் விளையாட்டு உபகரணங்களை நம் மாநில விளையாட்டு வீரர்கள் கூட வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கிட்ட தட்ட ஒரு ப்ரொபஷனல் விளையாட்டு வீரரை போலதான் ஒவ்வொரு மாணவனும்/மாணவியரும் நடத்தப் படுகிறார்கள். (உடனே நம்ம ஊர குறை சொல்ல ஆரம்பிச்சிடுவிங்களேன்னு கோபப்படாதிங்க, வேற வழி இல்ல புலம்பித்தான் ஆகணும்:( இவ்வளவும் நான் சொல்லக் காரணம் இதில் பத்து சதவிதம் கூட நம் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதால்தான் . அதுவும் அரசுப் பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது பி.டி பீரியட் என்றாலே சலிப்பாய்தான் இருக்கும். ஒட்டு மொத்த வகுப்பிற்கும் ஒரே கால்பந்துதான் கொடுப்பார்கள். கிளாஸ் லீடர் என்ற முறையில் பந்தை ஆசிரியரிடம் இருந்து வாங்கி கீழே வைத்து பலம் கொண்ட மட்டும் ஓங்கி உதைப்பேன் அத்தோடு என் பி.டி பீரியட் முடிந்தது. என்பது பேரும் ஒரு பந்தின் பின் ஓடினால் வேறு என்ன செய்ய முடியும், பந்தை கண்ணால் பார்ப்பதே பெரிய விஷயம். நம் பள்ளிகள் வெறும் கல்வி தொழிற்சாலைகளாக மட்டுமே தொடர்ந்து இயங்கி வருவது போல் பாவ்லா காட்டுகிறது அதையும் உருப்படியாய் செய்வதில்லை. சரி விடுங்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு இதுக்காகவே ஒரு பெருசு சொல்லி வச்சிட்டு போய் இருக்கு, இதையே நானும் சொல்லிட்டு தாண்டி போறேன், வேற என்னத்த செய்ய?



என்னதான் ஜப்பானை வியந்தாலும், இங்கு அனைத்தும் இயந்தரமாகி விட்டது போன்ற உணர்வு தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சிறுவர்கள் கூட எப்பொழுதும் உற்சாகமின்றியே காணப்படுகின்றனர். சமிபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன், நண்பர் குடும்பத்துடன் ஜப்பானில் நீண்ட நாட்களாக வசிப்பவர். அவரின் மகள் இங்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவர் மகளின் பள்ளியை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் கூறிய விஷயம் திடுக்கிடச் செய்தது, ஜப்பானில் குழந்தைகளுக்கு ஆக்ரோஷ உணர்ச்சி (aggresiveness) குறைவாய் இருக்க மருந்து புகட்டப் படுகிறது என்பதுதான் அது. சுருக்கமாக சொல்லணும் என்றால் சுரணை இல்லாமல் இருக்க பழக்கப் படுத்தவது போல். இது அவர்களின் ஆரம்ப கால பழக்கமா இல்லை உலகப் போருக்குப் பின் எடுக்கப்பட்ட பல சத்திய பிரமாணங்களில் இதுவும் ஒட்டிக் கொண்டதா என்று தெரியவில்லை. எதுவா இருந்தா என்ன நல்ல விஷயம்தானே என்று எண்ண முடியவில்லை, காரணம் சாதாரனமாய் குழந்தைகளிடம் காணும் ஒரு துறு துறுப்பு சுத்தமாய் மிஸ்ஸிங். என் மாமா அவரின் மகளை அடிக்க போகும் பொழுதெல்லாம் அவள் வீட்டின் வெளியில் பொய் நின்றுக் கொண்டு "எங்க ஓடிவந்து என்னய அடி பாக்கலாம்.." என்று இடுப்பை ஆட்டிக் காண்பித்து தெருவில் குதித்து ஓடி விடுவாள். குழந்தைகளுக்கு இந்த சுரணை கூட இல்லாமல் இருந்தால் எப்படி??

Friday, May 21, 2010

Puppy Shame



அது வழக்கமான திங்கட்கிழமை, காலை ப்ரேயர் முடிந்து அனைவரும் வரிசையாக கிளாஸ்க்கு சென்று அமந்திருந்தோம். எப்போதுமே முதல் பீரியட் தொடங்கும் முன்னர் ஒரு லேசான கிலி ஏற்படுவது சகஜம் முன்தினம் சொன்ன ஹோம் வொர்க் இத்யாதி இத்யாதி விஷயங்கள் எல்லாம் அப்போதுதான் ஞாபகத்துக்கு வரும். அதுவும் திங்கட்கிழமை காலை என்றால் கேட்கவே வேண்டாம், இந்த பக்கமாதான் ஸ்கூல்க்கு போகணுமான்னு கேட்காத குறையாக வந்து உட்கார்ந்து இருப்பேன். எல்லாம் சரியாய் முடித்திருந்தாலும் அந்த கிலி அடங்க குறைந்தது இரண்டு பீரியட் ஆகும். முதல் பீரியட் இங்கிலீஷ், ரோஸ்லின்ட் மிஸ் உள்ளே வர "குட் மார்னிங் மிஸ்ஸ்..." கோரஸ் , அதே கோரஸ் பக்கத்து பக்கத்து கிளாசிலும் வந்து அடங்கியது. அதற்க்கு பிறகு நிலவும் அமைதி இருக்கிறதே.. அது வயித்துக்கும் வாயிக்கும் உருண்டு கொண்டிருக்கும் கிலியை ஆ காட்டச் சொல்லி வேடிக்கை பார்க்கும். "டேக் யுவர் புக்.. டர்ன் டு பேஜ் தர்ட்டி.." ன்னு மிஸ் சொன்ன பிறகுதான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பக்கத்து பெஞ்சில் இருக்கும் பானுவையே பார்ப்பேன். கிளாஸ் ஆரம்பித்து இருபது நிமிடம் ஆகியிருக்கும், பிரின்சிபால் மேடம் பரபரப்பாக உள்ளே நுழைந்தார். "குட் மார்னிங் மேடம்ம்ம்.." பதிலுக்கு குட் மார்னிங் வரவில்லை.. சிட் டௌனும் வரவில்லை. இவங்க ரொம்ப நல்ல மேடம் ஆச்சே எப்போ கிளாசுக்கு வந்தாலும் மிஸ்கிட்ட பேசிட்டு போய்டுவாங்க, ஆனா இன்னைக்கு என்ன திரும்பி கிளாச ஒரு டைப்பா பார்க்குறாங்க. எதுக்கும் ஒரு முறை டை, பேட்ஜ் எல்லாம் சரி பார்த்துக் கொண்டேன். என்ன சொல்ல போகிறார் என்று எங்களுடன் மிஸ்ஸும் உன்னிப்பாய் கவனிக்க, " வாட் இஸ் கேபேஜ் இன் டமில்?" என்று கேட்டு விட்டு எங்களை முறைத்து பார்த்தார். ப்பூ இதுதானா விஷயம்.. வேற என்னமோ ஏதோன்னு.. மனசுக்குள்ள ஓடிக் கொண்டிருக்கும்போதே "முட்டை கோசு" என்ற பதில் சத்தமாக என் அனுமதி இல்லாமல் என் வாயில் இருந்தே வந்து தொலைத்தது. நான் யோசிக்க கூட இல்லையே, அதற்க்குள் பதில் எங்கிருந்து வந்தது? பதில் சொன்னதுதான் தாமதம், எங்கிருந்தோ தாவி என் கையை லபக்கென்று பிடித்து தர தரவென்று இழுத்துக்கொண்டு மேடம் ஓட என்ன நடந்தது ஏது நடந்தது என்று புரியாமல் கூடவே நானும் ஓடினேன். இது என்னடா வம்பு, எதாவது தப்பா சொல்லிட்டோமோ? இல்லையே முட்டை கோசு கரெக்ட் ஆச்சே.. ஒரு வேளை கோசு மட்டும் தான் சொல்லனுமா? ஒய் யு செட் முட்டை கோசு?னு கேட்டாங்கனா என்ன பதில் சொல்றது?, ச்சே கம்முனு இருந்திருக்கலாம்.. ப்ச் கொட்டி நிமிர்ந்து பார்க்கும் போது பிப்த் ஸ்டாண்டர்ட் ரூம் முன்னாடி நின்று கொண்டிருந்தேன். அட! ஒருவேளை டபுள் ப்ரோமொஷனா!?! போன வாரம் கூட இப்ராகிம் டபுள் ப்ரோமோஷன் வாங்கி நம்ம கிளாசுக்கு வந்தானே.. இதே மாதிரி முட்டை கொசுன்னு சொல்லி இருப்பானா?.. இருந்தாலும் முட்டை கோசுக்கு போய்... என்ற யோசனையில் இருந்து எளிதாக வெளியே வரவைக்கும் உறுமலுடன் "ம்ம் டெல் தெம்.." என்றார் மேடம். டபுள் ப்ரோமோஷன் வாங்குவதை பாதியிலே விட்டுவிட்டு மேடமை புரியாமல் பார்த்தேன், அதே பாவனையில் கிளாசின் உள்ளேயும் எட்டிப் பார்த்தேன். ஒட்டு மொத்த பசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த பாம்பு டான்ஸ் ஆடும் பொண்ணும் (அவ்ளோ அழகு !) திரும்பி பார்த்துக்கொண்டிருப்பது ஏனோ என்னை மிகவும் நெளியச் செய்தது.. டெல் தெம்னா இவங்ககிட்ட எதோ சொல்லனும்.. என்னத்த சொல்லனும்?? ஓ அதுவா.., அதற்குள் "ம்ம் கமான்" மறுபடியும் மேடம் லேசாக உறும அவசர அவசரமாக கோசு மட்டும் வாயில் இருந்து அபத்தமாய் உருண்டு விழுந்தது முட்டையை காணவில்லை. எந்த கேள்வியும் கேட்க்க படாமல் "ம்ம் டெல் தெம் ..கமான்.." என்ற உறுமலுக்கு வெறுமனே "கோசு " என்ற பதில் நாராசமாய் இருந்தது.. நாராசமாய்தான் இருக்கும். அந்த கிளாசில் இருந்த ஜெயா மிஸ் வேறு கோல் என்று சிரித்து விட்டார். ச்சே.. வேற ஒரு கிளாஸ்ல பப்பி ஷேம் ஆய்டுச்சே.. இனி யாராவது கேள்வி கேட்கட்டும்.. மேடம் கைபிடியை லேசாக தளர்த்திய மறுவிநாடி என் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அன்றில் இருந்து இரண்டு விஷயங்கள் என்னில் ஒட்டிக்கொண்டது ஒன்று முட்டை கோசு மேல் கூடுதல் பற்று(!) இரண்டாவது உங்களுக்கே புரிந்திருக்கும்.

Friday, April 30, 2010

Hana-mi

"ஹனாமி.., ஹனாமி.. " பேரு நல்லா இருக்கு இல்ல ? ஏதோ சுனாமி மாதிரி ஒன்னு கிளம்பிடுச்சுன்னு பயப்படாதிங்க. ஹனாமி, ஜப்பான்ல ஒரு பிரபலமான பொழுதுபோக்கு . சுருக்கமா சொல்லனும்னா சைட் அடிக்கிறது, கொஞ்சம் பொறுங்கப்பா வழக்கமான சைட் கிடையாது 'பூ'வை சைட் அடிக்கிற விஷயம் (ஹி.. ஹி .. ரெண்டும் ஒன்னு தானே.. ;) . ஹனா - பூக்கள், மி - பார்த்தல். கேக்கறத்துக்கே அட்டகாசமா இருக்கு இல்ல? பார்க்கிறதுக்கு இன்னும் அட்டகாசமா இருக்கும். நான் வழக்கமான "மி"க்காக கிளம்ப, அது ஹனாமி'ல முடிஞ்சது. அங்க கிளிக் செய்தது உங்களுக்காக.... "ஹனாமி"ங்கோ ..


























இடங்கள் : Shinjuku-goyen, Tokyo Tower, Kawagoe

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன்


தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு முன்னேற்றி செல்லும் செல்வரகாவனிற்கு முதலில் வாழ்த்துக்கள். மிகத் திறமையான அனுபவ இயக்குனர்கள் தொட தயங்கும் கதைக் களத்தை தைரியமாய் கையாண்டு சிறந்த படைப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். சரி விஷயத்திற்கு வருகிறேன் இது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனப் பதிவல்ல, சில விமர்சனங்களை பற்றிய ஒரு பார்வை. நேற்று இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது எதேர்ச்சையாய் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் கண்ணில் பட்டது. மிகுந்த எதிர்பார்புகளுடன் வெளியான படம், முன்று வருட கடின உழைப்பு இப்படி பல ஊந்துதல்கள் படத்தை பார்த்திருந்தும் விமர்சனத்தை படிக்கத் தூண்டியது. படத்தின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் விமர்சனத்தை படித்தேன் ஆரம்பித்தேன், விமர்சனத்தை படிக்க படிக்க ஒரு கட்டத்தில் என்னால் சகிக்க முடியாமல் மூடி வைத்து விட்டேன். இவ்வளவு தரம் குறைந்த விமர்சனத்தை நான் இதுவரை வாசித்தது இல்லை. அதிலும் இது ஒரு பிரபல நாள் இதழின் விமர்சனம் வேறு. எதற்காக இந்த அவசரக் குதறல் என்றே புரியவில்லை. ஏதோ படத்தில் கவுண்டமணி தெருவில் குதித்து குப்புற படுத்து "அவன் என்ன பாத்துட்டான்... பாத்துட்டான் . .." ன்னு கதறுவது போல படத்தை பார்த்த உடன் இவர்களும் திபு திபுவென்று ஓடி பொய் ஒரே மூச்சாய் பேனாவை எடுத்துக் குதற ஆரம்பித்து விடுகிறார்கள். விமர்சனம் என்றால் எதிர்வினையும் அடங்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு தரம் உண்டு, சொல்ல போனால் அதிக படியான எதிர்வினை விமர்சனங்கள் தான் தரமான திரைப்படங்களுக்கு வித்தாக இருக்கும் என்பதை நம்புபவன் நான்.


நேற்று நான் படித்ததும் ஒரு எதிர்வினை தான் ஆனால் எழுதப்பட்ட அனைத்துமே மட்டமான கருத்துக்கள். உடனே அபிப்பிராயமும் கருத்துக்களும் ஒவொருவருக்கும் மாறுபடும் என்று வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிடாதிர்கள். மாற்று சினிமா வேண்டும், உலக தரமான திரைப்படங்கள் எடுக்க பட வேண்டும் என்று பிதற்றிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. திரைபடங்களை எதிர் நோக்கும் விதமும் ரசிப்பு தன்மையையும் நாம் முன்னகர்த்திக் கொள்ளவது மிக அவசியம். அதுவும் திரைப்படங்களை விமர்சிபவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் படித்த விமர்சனத்தின் ஆசிரியர் படத்தை எந்த வகையிலும் ரசிக்கவில்லை, புரிந்து கொள்ளவும் இல்லை என்பது விமர்சன நோக்கத்திலே வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. விமர்சனத்தில் ஆசிரியர் எழுப்பிய பல கேள்விகள் அவராகவே பதில் கண்டறிய வேண்டிய ஒன்று. உதாரணத்திற்கு "சோழர்கள் எந்த காலத்தில்யா வியட்நாமுக்கு போனாய்ங்க?.. நம்ம காதுல பூ சுத்துராணுங்க..", " இதில ஆயிரத்தில் ஒருவன் யாருனே தெரியல?..." , "இவங்க எப்படி சோழர் காலத்துக்குள்ள போனாங்கனே புரியல.. ??" போன்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தார். சொல்ல போனால் இவர் உண்மையிலேயே படம் பார்த்தாரான்னு எனக்கு புரியல. விமர்சனம் செய்பவர்களுக்கு வரலாறோ சோழ ராஜ்ஜியத்தைப் பற்றியோ தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. படைப்பை ஒரு முழு fantasy படமாக பார்த்திருந்தால் மேற்படி கேள்விகளுக்கு அவசியம் இருந்திருக்காது சோழர்களை பற்றிய தகவல்களும் தேவை இருந்திருக்காது. ஆனால் அதெல்லாம் கிடையாது, படத்தில் எது உண்மை எது இயக்குனரின் கற்பனை என்பதை எழுதியே தீருவேன்னு அடம் பிடித்தால் மேற்படி தகவல்களும் விவரமும் மிக அவசியம். குறைந்தபட்சம் சோழர் ஆட்சி வரைபடத்தையாவது ஒரு முறை பார்த்திருப்பது அவசியம். இயக்குனர் மிகுந்த கவனத்துடன் தன் கற்பனையை கலந்திருக்கிறார். சோழர்கள் புலம் பெயர்ந்த காலக் கட்டத்தையும் இடத்தையும் கவனமாய் தேர்வு செய்துள்ளார். திரை படத்தை விமர்சனம் செய்வதற்கு முன் இது மாதிரி சிறு சிறு விஷயங்களை புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ மறுப்பதுதான் ஆச்சரியமாய் உள்ளது. படம் பார்த்த உடனே " இதில எப்படிண்ணே எரியும்???"ன்னு செந்தில் கேட்பது போல பத்தாம்பசலி தனமான கேள்விகளையும் விமர்சனங்களையும் நிறுத்தி விட்டு வெவ்வேறு தளங்களில் விமர்சனத்தை முன்வையுங்கள். இந்த படத்தில் தொழில்நுட்பரீதியாய் பல புதுமைகள் செய்ய பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் என்ன மாதிரியான புதுமைகள் செய்யப்பட்டன, எப்படி செய்யப்பட்டன போன்ற தகவல்களும் தாராளமாய் விமர்சனத்திற்குள் கொண்டு வரலாம். படத்தின் இசைக் கோர்வைக்கு சோழர் கால வாத்தியங்கள் பல உபயோகப் படுத்தப்பட்டுள்ளன . அதில் பல கருவிகளை வாசிக்க இன்று எவருமே இல்லை. பூட்டான், தாய்லாந்து நாடுகளில் இதே போன்ற கருவிகள் உபயோகத்தில் இருந்ததை கண்டுபிடித்து அங்கிருக்கும் இசைகலைஞர்களை வைத்து இசையமைத்து இருகிறார்கள். இது கண்டிப்பாக பாரட்ட பட வேண்டிய முயற்சி. இன்னும் இதை பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அனைவரும் அறியச் செய்ய வெண்டும். என்னளவில் ஒரு முக்கிய மாறுதலான முயற்சிற்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரம் இந்த படத்திற்கு கிடைக்க வேண்டும்.