Friday, October 5, 2012

விலகல் - 1

ஒரு நீண்ட
குளிர் இரவின்
மௌனத்தைக் விரட்டும்
மெல்லிய விசும்பல்
எங்கும் படர்கிறது

எதன் மீதும்
நம்பிக்கையற்ற - அந்த
விசும்பல்
செவிகளில் கனக்கிறது

தினம்
உடைகிறேன் - அதன்
துயரத்தின் அடர்த்தியை
தாளமுடியாமல்

வேறு யாரை விடவும்
மூத்திர வாடையின்
வீரியத்தை
மிக அதிகமாய்
உணர்ந்துக்கொண்டதை புலம்பினான்,
உணர்ந்ததை விட
உணர்ந்துக்கொண்டே இருப்பதை..

சூடான
தேனீர்
அருந்திக்கொண்டும்

அடுத்த அறையில்
உபசரிப்பை
கேட்டுக்கொண்டும்

விருப்பமில்லாத
நிகழச்சிகளை
பார்த்துக்கொண்டும்

அவ்வப்போது
இடத்தை நகர்த்திக்கொள்ளும்
பல்லியை
கடிந்துக்கொண்டும்

பார்வையால் கடிகார
முட்களை
முடுக்கிகொண்டும்

எப்பொழுதாவது
சாத்தியப்படும்  - ஆழ்ந்த
நித்திரையில் கூட
அதை
உணர்ந்துக்கொண்டே இருப்பதை
புலம்பினான்

அவனுக்கு தெரியும்
மௌனத்தைக் விரட்டும்
அந்த விசும்பலும் - மெல்ல
தோற்றுக்கொண்டிருப்பது பற்றி

ஒரு நீண்ட
குளிர் இரவில்
மௌனத்தைக் விரட்டும்
அந்த விசும்பல்
எழுப்பப்படவில்லை

நம்பிக்கையற்று
விலகிக் கொண்டுவிட்டான்
மனித வாடையில் தொடங்கி
அனைத்திலிருந்தும்  ..


No comments: