Monday, October 1, 2012

ராஜீவ் காந்தி


"ஏய் இன்னைக்கு ராஜீவ் காந்தி நம்ம ஊருக்கு வர்றார்டி.." முகத்தில் அப்பி இருந்த ஃப்பேர் அண்ட் லவ்லியை தேய்த்துக் கொண்டு அம்மா சித்தியிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். சித்தி, இந்திரா காந்தியை நேரில் பார்த்திருப்பதாகவும் அவரை விட ராஜீவ் காந்தி கலர் அதிகம் இருக்க கூடும் என்றும் உறுதியான குரலில் தன் அனுமானத்தை கூறினாள் . கருத்தாய் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த நான் இந்த  பேச்சை கேட்டு திடுக்கிட்டு சற்று கோபமாய் வெளியேறினேன். எனக்கு ராஜீவ் காந்தியின் மேல் சிறிது கோபம். என்றோ ஒரு நாள் நண்பன் ஒருவன் ஏரோப்ளேன் ஒன்று கைக்கு எட்டும் தூரத்தில் பறந்ததாகவும், அதிலிருந்து ராஜீவ் காந்தி டாட்டா காட்டி சாக்லேட் வீசியதாகவும் சொல்லி எல்லோரையும் உசுப்பிவிட்டிருந்தான். இந்த விஷயம் எப்படியோ என் தெரு வரை பரவி, அன்றில் இருந்து எப்போது ஏரோப்ளேன் பறந்தாலும் மூச்சு முட்டும் வரை அதை விரட்டி தோற்பதே எங்கள் கடமை, லட்சியம் எல்லாம். ஒரு முறை கூட ராஜீவ் காந்தி சாக்லேட் வீசியதில்லை, அட சாக்லேட் கிடக்கிறது ஒரு டாட்டா கூடக் காட்டாமல் போனால் கோபம் வருமா வராதா?. ஏரோப்ளேனில் ஜன்னலை திறந்து டாட்டா காட்டுவதில் இருக்கும் அசௌகரியம் அப்போது விளங்கவில்லை. இருந்த கோபத்தில் மம்மிக்கு டாட்டா சொல்லாமல் பள்ளிக்கு கிளம்பினேன்.



 பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரே பரபரப்பு, எங்கு பார்த்தாலும் ராஜீவ் காந்தியை பற்றிய பேச்சு, கிளாசுக்குள் நுழைந்த பிறகுதான் விஷயம் தெரிந்தது எங்கள் எல்லோரையும் ராஜீவ் காந்தியை பார்க்க அழைத்து போகிறார்கள் என்று. அதனால் பையை கிளாசிலே வைத்து விட்டு வெளியே வரும்படி மிஸ் சொல்லிச் சென்றார். பையை வைத்துவிட்டு திரும்பும் போதுதான் அவர்களின் தீவிரமான பேச்சு என் காதில் விழுந்தது. மணி, கார்த்தி, ஜக்கு.
ஜக்கு கொஞ்சம் பயத்துடன்அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். மணி தன்னுடைய முழு ப்ளானையும் மற்ற இருவருக்கும் விளக்கிக் கொண்டிருந்தான். முவரும் தங்களுடைய பென்சிலை முடிந்த வரை  கூர்மையாய் சீவி வைத்து கொள்ள வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும்  குறி தப்பவே கூடாது. என்ன விஷயம் என்று நெருங்கி விசாரித்ததில் மணி கொஞ்சம் விலாவரியாக விளக்கினான். அதாவது ராஜீவ் காந்தியை பார்க்க போகும் போது நாம் வெட்ட வெளியில் உட்கார வேண்டும் என்றும், அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கழுகு நம்மை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். அதற்குதான் முவரும் பென்சிலை கூராய் தீட்டி எதிர் தாக்குதலுக்கு தயாராய் இருபதாய் சொல்லி அவர்களை அழைத்துச் சென்று விட்டான். சற்று குழப்பமாய் இருந்தது,  எனக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை, பென்சில் வைத்துக் கொண்டு எப்படி?? ஒரு ரெனால்ட்ஸ் பேனா இருந்தால் சமாளிக்கலாம் என்பது என் திட்டவட்டமான கருத்து.

அனைவரையும் வரிசையாக அழைத்துச் சென்று பள்ளியில் இருந்து சற்று தொலைவில் இருந்த காந்தி சிலை அருகே உட்கார வைத்தனர்.  சிறிது  நேரத்தில் ராஜீவ் காந்தி வந்து விட்டார்.. கையசைத்தார்.. கொடி ஏற்றினார்.. சிரித்தார்.. எதை பற்றியோ பேசினார் ..  சாக்லேட் கூட கொடுத்தார். உக்கும்., யாருக்கு வேணும்.. மணி சொன்ன மாதிரி இன்னும் அந்த கழுகு வந்து சேரவில்லை. எல்லோரும் ரா.காந்தி பேசுவதை பார்த்து கொண்டிருக்க நான்கு தலைகள் மட்டும் வான் நோக்கி இருந்தது. நான் அந்த மூவரிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்தேன். முவரும் கையில் பென்சிலை உறுதியாய் பிடித்துக் கொண்டு தயாராய் இருந்தனர். எந்த நேரத்திலும் அந்த சாகசம் நிகழலாம், அப்போது ஜக்குவின் பென்சில் கூர் எங்கோ மோதி உடைந்து விட,  அவன் பதட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டான். ஒருவழியாய் கார்த்தி அந்த பென்சிலை சீவி பழையபடி கூர்மையாக்கி கொடுத்தபின் சமாதானமாகி பொசிஷனுக்கு வந்து விட்டான். இதுவரை நான் கழுகை கிட்டிருந்து பார்த்ததில்லை இன்று எப்படியேனும் பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில்  கீழும் மேலும்  மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு காக்கை கூட வானில் வந்தபாடு இல்லை, அதற்குள் ஜன கன மன பாட்டு, பின் எல்லோரும் எழுந்து திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்கள் . ரா.காந்தி கூட கிளம்பி விட்டார் ...!, ச்சே கழுகு வர்ற வரைக்கும் அவர் இருந்திருக்கலாம்..  இன்னைக்கும் ராஜீவ் காந்தி(!) ஏமாத்தி புட்டாரே..  ப்ச் .. நான் கொஞ்சம் வருத்ததுடன் திரும்பினேன்,  ஜக்கு மட்டும் கொஞ்சம் உற்சாகமாய்...


கொஞ்ச நாட்கள் ராஜீவ் காந்தியை சுத்தமாய் மறந்திருந்தேன். "ஏன்டி ராஜீவ் காந்தி செத்துட்டாரமே ?" முகத்தில் அப்பி இருந்த ஃப்பேர் அண்ட் லவ்லியை தேய்த்துக் கொண்டே மம்மி சித்தியிடம் கேட்டாள்.
 ராஜீவ் காந்தி செத்துட்டாரா.??. சரி கிடக்கட்டும் என்று காதில் வாங்கிக் கொண்டு கடை தெரு பக்கம் நடந்தேன் . கடை தெரு வெறிச்சோடி இருந்தது,  ஆட்டோ நிறுத்தத்தில் ராஜீவ் காந்தியின் பெரிய படம் ஒன்றை மாட்டி பத்தி ஏற்றி வைத்திருந்தார்கள்.  எப்போதும் பால் வாங்கும்  கடை பக்கம் ஒதுங்கினேன். பெருசுகள் ராஜீவ் காந்தியின் மரணத்தை தினத் தந்தி வைத்து துப்புதுலக்கி கொண்டிருந்தார்கள்.

ஒரு பொண்ணு.... வயுத்துல பாம்..... குனிஞ்சது .. வெடிச்சது.. என்று அரை குறையாய் காதில் விழுந்ததே கொஞ்சம் பீதியை கிளப்பியது. பால் வாங்கிக் கொண்டு திரும்பும் போது ஒரு பெருசு "ராஜீவ் காந்தி கூட செத்தது பத்து போலிசும் நாலு பொது ஜனங்களும் தான்.. நம்ம ஊரு கட்சி காரனுங்க ஒருத்தன் கூட அங்க இல்ல.. அது எப்பட்ரா ??" என்று பொருமிக் கொண்டிருந்தார். இந்த கேள்வி மட்டும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதில் யாரும் சொன்னதாக தெரியவில்லை. எது எப்படியோ.., என்னை இரண்டு முறை ஏமாற்றிய  ரா.காந்தி இறந்தே போய்விட்டார் :(

No comments: