Tuesday, October 9, 2012

யாரிடமாவது விசாரிக்க வேண்டும்

யாரிடமாவது
விசாரிக்கவேண்டும்
யாரிடம் விசாரிப்பது
உன்னை பற்றி ?
யாருக்கு புரியும்
உன் விசாரிப்புகள் பற்றி?

ஒரு வரி
சம்பாஷனையில் - அது
முடிவது
போதுமானதாயில்லை

எப்படி கேட்பது
உன் சௌகரியங்களை பற்றி
எப்படி கேட்பது
உன் கண்களின் உயிர்ப்பை பற்றி
எப்படி கேட்பது
ஒரு இன்மையின் நிரப்புதல் பற்றி

நீ
அத்தனை
ஏமாற்றங்களையும்
எங்கு புதைக்கிறாய்

இவ்வளவு
அன்பு ததும்பும்
கண்கள்
எப்படி உனக்கு மட்டும்

எதை பாராட்டி
இவ்வளவு அன்பு

நீ
எங்கிருந்து  கற்றுக்கொண்டாய்
உனக்கான
கலாச்சாரத்தை

நீ
தலைகோதும்
என்
விரல்களுக்காகவே
இந்த பிறவி
என்று
குழைவதில் - நானல்லவா
லயித்திருந்தேன்

எனக்கு தெரியும்
உன் பக்தி - தரம் குறையாமல்
வேறு யாருக்கும்
கிடைக்குமென்று

அதனாலென்ன
கொடுப்பதும்
கொடுக்கபடுவதும்
அதுவேதான்..

யாரிடமாவது
விசாரிக்க வேண்டும்
உன்னை பற்றி





1 comment:

Pradeep said...

Liked the selection of photo (1) too...
By the way Naveen kumar,
நாய்க்கு இருப்பது நன்றி உணர்வு...பக்தி கிடையாது :)